பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் சாத்தனவாடியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்த மாதம் 6ஆம் தேதிக்குள் உங்களுக்கு பதில்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தெரிவிக்கப்படும்.
நமது மாவட்டத்தை திறந்த வெளி கழிப்பிடமில்லாத மாவட்டமாகவும், சீமைக் கருவேலங்கள் இல்லாத மாவட்டமாகவும் மாற்ற பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உங்கள் பகுதியில் இதுவரை தனிநபர் கழிப்பறைகள் அமைக்காதவர்கள் உடனடியாக அரசின் உதவியுடன் கட்டப்படும் தனிநபர் கழிப்பறை திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும். மேலும் நீராதாரத்தை அழிக்கும் சீமைக்கருவேல மரங்களை அழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் நீராதரங்களை நல்ல முறையில் பராமரிப்பது நமது கடமையாகும். மேலும், இதுபோன்ற மழைக்காலங்களில் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காத அளவிற்கு நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீர்த்தேங்கி அதில் கொசுக்கள் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த முகாமில் திருமண உதவித்தொகை, வேளாண் இடுபொருட்கள் வழங்குதல், தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்ககுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 62 பயனாளிகளுக்கு ரூ.12 லடசத்து 6 ஆயிரத்து 41 மதிப்பிலான உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.