பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதாவது காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு மின்சாரம் இருக்கும், ஒரு மணி நேரம் மின்சாரம் இருக்காது. இதே நிலை இரவு நேரங்களிலும் தொடர்கிறது. அதாவது தொடர்ந்து 2 மணி நேரம் மின்சாரம் உள்ளது என்ற நிலை இல்லாததால் வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்காளக கை.களத்தூர் சுற்றுப் பகுதிகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணாபுரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் பாஸ்கரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கை.களத்தூர் மின் பகிர்மான பகுதிகளில் பெரும்பாலான இன்சுலேட்டர்கள் பழுதடைந்துள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்பணியாளர்களை கொண்டு பழுதடைந்த இன்சுலேட்டர்களை மாற்றி வருகிறோம் என தெரிவித்தார்.