இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டக்லஸ் அகஸ்டஸ் மகன் ஏரல்அகஸ்டஸ் (57), ஆசிரியரான இவர் குடும்பத்துடன் கடந்த சில வருடங்களாக பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை பகுதியில் தங்கி பகுதி நேர ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியிலுள்ள உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் கட்டணம் செலுத்தி விட்டு டூவீலரில் வீட்டை நோக்கி பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானவில் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே பால்கேன்களை ஏற்றி கொண்டு சென்ற மினி லாரி ஏரல்அகஸ்டஸ் ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஏரல்அகஸ்டஸ் பாலக்கரை ரவுண்டானா சுற்று சுவருக்கும், மினி லாரியின் டயருக்கும் இடையே சிக்கினார். முதுகு பகுதியில் பலத்த படுகாயமடைந்தார்.
அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏரல்அகஸ்டஸ் மின் தடையால் காரணமாகவும், மருத்துவர்களின் கால தாமதமான சிகிச்சையாலும் உயிரிழந்தார்.
இதுபற்றி ஏரல்அகஸ்டஸின் நண்பரான திலீப்குமார் (32) அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்கான மினி லாரியை ஓட்டி சென்ற பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்களம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சுதந்திரகுமாரை (22) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.