படவிளக்கம்: வேப்பந்தட்டை தோட்டக்கலை அலுவலர் ஆனந்தனிடம் விவசாயி ஒருவர் தேசிய தோட்டக்கலை மானியத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த போது எடுத்தப்படம்
பெரம்பலூர் : வேப்பந்தட்டையில் நடைபெற்ற தேசிய தோட்டக்கலை மானியத்திட்ட சிறப்பு முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்.
வேப்பந்தட்டை தோட்டக்கலை அலுவலகத்தில் துணை இயக்குனர் இந்திரா வழிகாட்டுதலின் படி விவசாயிகளுக்கான மானியத்திட்ட சிறப்புபதிவு முகாம் நடைபெற்றது.
அதாவது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டதில் மானியத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் மா அடர் நடவு, வீரிய காய்கறிகள் சாகுபடி, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சாகுபடி மற்றும் மிளகாய் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்தனர்.
மேலும் பாதுகாக்கப்பட்ட சாகுபடி இனத்தின்கீழ் பாலித்தின் பசுமை குடில் அமைக்கவும், நிழல் வலை அமைக்கவும், நெகிழி மூடாக்கு அமைக்கவும், அயல் மகரந்த சேர்க்கையை அதிகபடுத்தும் வகையில் தேனீக்கள் வளர்க்கவும் விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பம் பெறபட்டது.
விண்ணப்பித்த விவசாயிகளிடம் நிலத்திற்காக கணிணி சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், நில வரைபடம் மற்றும் 3 பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகியவை பெறப்பட்டது.
இதில் சுமார் 165 க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை தோட்டக்கலை துணை இயக்குனர் (தொழில் நுட்பம்) விஜய காண்டீபன், வேப்பந்தட்டை தோட்டகலை அலுவலர் ஆனந்தன், வேளாண்மை அலுவலர்கள் வீராசாமி, மூர்த்தி, சந்திரசேகர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.