Aadhar number of smart phone by connecting the facility to the introduction of ration cards
ஸ்மார்ட் போன் மூலம் ரேஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில், நவீன கருவி மூலம் ஆதார் எண் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு ஆதார் அட்டையை எடுத்து சென்று காண்பித்தால் குடும்ப உறுப்பினர்கள் விவரம், சிலிண்டரின் எண்ணிக்கை, செல்போன் எண் போன்ற அனைத்து விவரங்களையும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள். இந்த தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே மின்னணு ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்ட்) வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்பட்டு, வருகிற ஜனவரி மாதம் முதல் மின்னணு ரேஷன் கார்டு மூலமே பொருட்கள் வழங்கவும் அரசு திட்டமிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகிறது. தற்போது, ரேஷன் கடைக்கு நேரில் சென்று ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களிடம் உள்ள செல்போன் மூலமே (ஸ்மார்ட் போனில் மட்டும் இந்த வசதி உள்ளது) ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆதார் எண் வழங்காதவர்கள் அல்லது ரேஷன் கடைக்கு சென்று வரிசையில் நிற்க நேரம் இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள் ளது. அவர்களுக்கு ஸ்மார்ட் போனில் விவரங்களை பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் எளிதாக இருக்கும். இந்த செயலியின் மூலம் ரேஷன் கார்டுக்குரிய பல்வேறு செயல்களை சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் இருந்தே கண்காணிக்க முடியும் என்றார்.
ஆதார் எண்ணை பதிவு செய்யும் வழிமுறை
ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஆப்ஸ்சில் TNEPDS என்ற இலவச செயலியை பதவிறக்கம் செய்தால், அது அவர்களின் ஸ்மார்ட் போன் ஸ்கிரினில் வந்துவிடும். இதேபோல் QR CODE ஸ்கேன் செயலியையும் பதிவிறக்கம் செய்யலாம். பதவிறக்கம் செய்த பின்னர் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்ப தலைவரின் செல்போன் எண்ணை செயலியில் உள்ளீடு செய்தால், உடனே ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாஸ்வேர்டு எஸ்எம்எஸ் மூலம் செல்போனுக்கு வரும். அந்த எண்களை பதிவு செய்தால் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய வசதியாக கேமரா ஆன் ஆகும்.
பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR CODE ஸ்கேன் செய்யப்பட்டு ஆதார் எண் திரையில் தோன்றும். உடனே நாம் `சமர்ப்பி’’ என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். மேலும் பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேஷன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இது மிக எளிதாகத்தான் இருக்கும். விரைவாகவும் பதிவு செய்யப்பட்டு விடும்.