Admission Consultancy in Private Schools for Free and Right to Education
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், குழந்தைகளின் சேர்க்கை குறித்து தனியார் சுயநிதிப் பள்ளிகளின் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்ததாவது:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 2017-18ம் கல்வியாண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 19 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக் பள்ளிகளில்) 398 இடங்களும், 50 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 812 இடங்களும் நுழைவு நிலை ( LKG / I Std ) வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மொத்தம் 1,210 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தங்கள் பள்ளிகளில் அதிக அளவில் பயன்பெறும் வகையில், தகுதி வாய்ந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு தங்கள் பள்ளிகளில் பயில்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் தங்கள் பள்ளிகளில் பயில்வதற்குகாக, இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உரிய தகுதி இருந்தும், வாய்ப்புகள் மறுக்கப்படின் அதற்கான காரணங்களையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் தங்கள் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் உள்ளன என்பதையும் பள்ளி தகவல் பலகையில் முறையாக அறிவிப்பு செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அதிகப்டியான மாணவ, மாணவிகளை தங்கள் பள்ளிகளில் சேர்த்து பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாட்டிற்கே ஓர் முன்னோடி மாவட்டமாக விளங்க அனைத்துப் பள்ளி முதல்வர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பெ.அம்பிகாபதி, மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் (பொ) செந்தமிழ்செல்வி , மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் திருஞானம், உதவி மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஜேக்கப் வினோத், மற்றும் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் உதவி, கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள்
மற்றும் 19 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 50 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் அ பிரேம்குமார், அ.மணிவண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சோ.மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.