Auto awareness increases student enrollment in government schools
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது.
அதன்படி 01.06.2017 முதல்; 06.06.2017 வரை பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் அரசுப்பள்ளிகளில் கட்டணமில்லாத தரமான கல்வி வழங்கப்படுவதை அறியும் விதமாக விளம்பர பேனர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் கிராமப் புறங்களிலுள்ள மக்களிடையே அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் ஒன்றியத்திற்கு ஒரு ஆட்டோ வீதம் 4 ஆட்டோக்கள் மூலமாக விழிப்புணர்வு பிராச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி பெரம்பலூர் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்திடும் வகையில் இன்று பாலக்கரையிலிருந்து ஆட்டோ விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சியை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு ஆட்டோக்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனி தனி வகுப்பறைகள், வசதியான காற்றோட்டமான வகுப்பறைகள், போதுமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதை எடுத்துக்கூறியும்,
அரசுப்பள்ளிகளில் தமிழ்வழி பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் குறித்தும், நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியில் உள்ளனர் என்ற விபரங்களையும் கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசங்கள் மூலமாக விளம்பரப் படுத்தப்பட உள்ளது .
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.