Blinkers lights at 19 places to prevent accidents in Perambalur district
பெரம்பலூரில், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கூட்டம், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் போலீஷ் எஸ்.பி மணி முன்னிலையில், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத்தில் சாலை விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் காவல் துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கொண்டைக்காரன் பாலம், காரை பிரிவு ரோடு, கல்பாடி பிரிவு ரோடு, தீரன் நகர், நான்கு ரோடு மேம்பாலம் தேசிய நெடுஞ்சாலை, தண்ணீர் பந்தல், சின்னாறு ஆற்றுப்பாலம் பகுதி ஆகிய ஏழு பகுதிகள் அதிக விபத்துகள் (ஹாட் ஸ்பாட்) மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு இப்பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு விபத்துப் பகுதி என எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஒளிரும் மின் விளக்குகள் (Blinkers Light) பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள ஆஞ்சநேயர் கோயில், இரூர் பிரிவு சாலை, நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், சிறுவாச்சூர், தனலட்சுமி மருத்துவ கல்லூரி, சாய்பாபா கோவில், வல்லாபுரம், முருக்கன்குடி, திருமாந்துறை, கோனேரிபாளையம், செஞ்சேரி ஆகிய 12 (பிளாக் ஸ்பாட் ஏரியா) இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட எச்சரிக்கை ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகளால் 2020ஆம் ஆண்டில் 77 விபத்துகளில் 37 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது, இந்த ஆண்டு (2021) தற்போது வரை 45 விபத்துகளும் 20 உயிரிழப்பும் என விபத்து மற்றும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விபத்துகள் நடக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு விபத்துகளை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.