Bus Strike in Perambalur: Traffic freezing: Natural life impact
தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பெரம்பலூரிலும் பஸ் ஸ்டிரைக் தொடங்கியதால் பயணிகள் பரிதவித்தனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போக்குவரத்துதுறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், பெரம்பலூர் பழைய – புதிய பேருந்து நிலையங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கம் போல் தனியார் பேருந்துகள் ஓடியது. அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளிலிருந்து 112 பேருந்துகளில் 4 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. கிராமப்புறங்களுக்குள் செல்லும் அனைத்து நகர பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற்சங்க தொழிலாளா்களும் பணிக்கு வரவில்லை. தற்காலிக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துனர்களை கொண்டு பேருந்தை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அலுவலா் முயற்சி மேற்கொண்டுள்ளனா். செமஸ்டர் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பஸ் ஓடாததால் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர் பணிமனையில் 100க்கு மேற்பட்ட பஸ்கள் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பேருந்துகள் இயக்கப்படாததால், கிராம புறத்தில் இருந்து நகர் புறத்திற்கு பணிக்கு வர முடியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் திண்டாடினர். பெரு மற்றும் சிறு வணிக நிறுவனங்களில் வர்த்தம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், கிராம மக்களையே நம்பி உள்ள பெரம்பலூர் நகரம் வெறிச்சோடியது.
பள்ளி கல்லூரி செல்லும் வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் பஸ் கூரை மீது ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இன்று காலையிலேயே போக்குவரத்து நிறுத்தம ஏற்பட்டதால், பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதை ஒத்தி வைத்தனர்.
இந்த பஸ் ஸ்டிரைக்கால், கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு இன்று மட்டும் ஏற்பட்டுள்ளது. போலீசாரும், போக்குவரத்து ஊழியர்களும் வழித்தடங்களில் பஸ்களை இயக்க முயன்ற போது மறியல் போரட்டத்தில் ஈடுபட்டதால் இயக்க முயன்ற பஸ்களும் நிறுத்தப்பட்டன.