Complaint against VCK Cadres prevented the work the govt servant near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் சார்பதிவாளரை தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக வி.சி.,பிரமுகர் மீது குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், வேப்பூர் கிராமத்தில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் கலையரசன் ( வயது 40) குடிபோதையில் சென்றதாகவும், வரும் 21ந்தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநில சுயாட்சி மாநாட்டு துண்டு பிரசுரத்தை கொடுத்து, நன்கொடை கேட்டதாகவும்,
சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் (இணைய வழி சேவை) பத்திர பதிவு மேற்கொள்வதற்கான பணிகளில், பெரம்பலூர் மாவட்ட சார்பதிவாளர் ரமேஷ் மற்றும் வேப்பூர் சார்பதிவாளர் ஷோபா உள்ளிட்டஅலுவலக ஊழியர்கள் மும்முரமாக இருந்ததால், கலையரசனை கண்டு கொள்ளவில்லை என்றும்.
இதனால், ஆத்திரமடைந்த கலையரசன் துண்டு பிரசுரத்தை சார்பதிவாளர் டேபிளில் கிழித்து எறிந்து, தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்துதாகவும், கூறி, வேப்பூர் சார்பதிவாளர் ஷோபா வீடியோ ஆதாரத்துடன் குன்னம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கலையரசரன தீவிரமாக தேடி வருகிறார்.
சார்பதிவாளரை தகாத வார்த்தையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக வி.சி.,பிரமுகர் மீது சார்பதிவாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அரசியல் கட்சி பிரமுகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வி.சி.,கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பதிவாளர் மற்றும் குன்னம் போலீசாரிடம் புகாரை வாபஸ் பெறும் படியும், புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், சமாதானம் செல்வதாகவும் கூறப்படுகிறது.