Devendra Gula Vellayar announcement: Request to send the report to the Central Government
7 ஜாதிகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட, மானுடவியல் குழு ஆய்வு அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அரசை தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் நிறுவன தலைவர் எஸ்.குட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழக்கூடிய குடும்பன், பான்னாடி, காலாடி, வாதிரியான், பள்ளன், தேவேந்திர குலத்தான், கடையன் ஆகிய 7 உட் பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அறிவிக்கக்கோரி பல ஆண்டுகளாக இந்த சமுதாய மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மானுடவியல் குழுவானது, தனது ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆய்வறிக்கையை சட்டப்பேரவையில் வைத்து, மத்திய அரசிற்கு அனுப்பபடும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த ஆய்வறிக்கை பேரவையில் விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் மானுடவியல் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பிவைத்து 7 ஜாதியினரையும் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.