Education Loans in the camps 341 students applied for a loan of Rs .12.35 – Perambalur district collector information.
ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர் கல்வி கற்க கல்விக் கடன் பெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், கல்விக் கடன் முகாம் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்து கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2016-17 கல்வியாண்டிற்கான முதல் கட்ட கல்விக்கடன் முகாம் 30.07.2016 அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கல்விக் கடன்களுக்கான முகாம் 06.08.2016 இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:
இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில் வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாரங்கள் மற்றும் அரும்பாவூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்காக 11 வங்கிகளைச் சேர்ந்த 29 வங்கிக் கிளைகள் கலந்து கொண்டன.
இதில் மருத்துவம் பயிலும் 13 நபர்களும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் 188 நபர்களும், பட்டயக்கல்வி (டிப்ளமோ) பயிலும் 46 நபர்களும் மற்றும் பிற பாடப்பிரிவுகளில் பயிலும் இதர நபர்களும் என மொத்தம் 341 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரூ. 12.35 கோடி மதிப்பிலான கடனுதவி கேட்டு விண்ணப்பம் அளித்து உள்ளனர்.
இவர்களில் முறையான ஆவணங்கள், கல்வி தகுதி ஆகியவை சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு விரைவில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், கடந்த இரண்டு (30.07.16 மற்றும் 06.08.16) கல்விக்கடன் வழங்கும் முகாம்களில் கலந்துகொள்ள இயலாதவர்கள் 20.08.16 அன்று நடைபெற உள்ள கல்விக்கடன் வழங்கும் முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம்.
மேலும், கல்விக் கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள் (BONAFIDE CERTIFICATE), கல்லூரி மூலம் வழங்கப்பட்ட கட்டண விவரம்(FEES STRUCTURE) பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவக்கல்வி, பொறியியல் கல்விக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கான சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இந்த முகாமிற்கான விண்ணப்பங்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய இடங்களில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும் www.perambalur.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வங்கி மேலாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.