Five thousand banana trees fell due to rain in Perambalur district Claim to provide compensation
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட இழப்பை அரசு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பணப்பயிர்களில் ஒன்றான வாழையை ஏராளமான விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம், கோனேரிபாளையம், எளம்பலூர், குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாலையூர், எசனை என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிட்டுள்ளனர்.
தற்போது வாழை மரங்கள் தார் போட்டும், தார் போடும் பருவத்திலும், பூ மற்றும் பிஞ்சுகளுடன் உள்ள நிலையில், நேற்று மாலை திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பெய்த மழையை எதிர் கொள்ள முடியமால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வயல்களில் சாய்ந்து வீழ்ந்தது.
கொரோனோ வைரஸ் தொற்று காரமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வரும் வேளையில், கையிருப்பு இருந்த வாழை மரங்களும் சாய்ந்துபோனதால், சாகுபடி செய்ய வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் ஏக்கர் ஒன்றக்கு ரூ. 2லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.