Foot and mouth disease vaccination for livestock: Perambalur Veterinary Dept. Information

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்த நோய்களுக்கான தடுப்பூசி போடும் பணி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,26,050 மாடுகள் மற்றும் எருமைகளுக்கு மேற்க்கொள்ளபடவுள்ளது.

இந்நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியானது தண்ணீர் மற்றும் காற்றின் மூலமாக மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும், புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும்.

வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். பால் கறவை மிகவும் குறையும். நோயுற்ற கால்நடைகள் உற்பத்தி குறைவதுடன் சினை பிடிப்பதும் வெகுவாக பாதிக்கும். கறவைப் மாடுகளில் பால் குடித்து வரும் இளம் கன்றுகள் நோய்தாக்கி இறக்கவும் நேரிடும்.

எனவே, இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால் மற்றும் வாய்நோய் தடுப்புத்திட்டம் 15 -வது சுற்றின் கீழ் 2018-ம் வருடம் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிவரை மேற்கண்ட நோய்க்கான தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆதலால் கால்நடைகளை வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 4 மாத வயதுள்ள கன்று முதல் சினை, மற்றும் கறவை மாடுகள் உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!