Free Training for Group 2 and Group 2A Competitive Exam: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததுள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. கொரோனா நோய் பரவல் காரணமாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தற்போது இணையவழியில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு 01.09.2021 முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை நேரடியாக இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.09.2021 புதன் கிழமை முதல் வாரநாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்விற்கான பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதோடு, மாதிரிதேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து, வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று தெரிவித்துள்ளார்.