Funding for Repair and Renovation of Christian Churches: Perambalur Collector Information!
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற் கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடத்திற்குள் இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேற்பட்ட தேவாலயத்திற்கு ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத் துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் (பிற்சேர்க்கை-III) அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவத்தை பிற்சேர்க்கை- II & III உள்ளவாறு சான்றிதழ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw.tn.gov.inஇல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் தலைமையிலான குழு அவ்விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியின் அடிப்படையில் தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் கூடிய முன்மொழிவினை சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். மேலும், இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்து சீரமைத்துக் கொள்ள ஏதுவாக சம்பந்தப்பட்ட தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்