திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 535 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
வேப்பூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்த குமார், அருண், சந்துரு மற்றும் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த பெரியசாமி ஆகியோர் கிணற்றில் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரன நிதியிலிருந்து தலா ரூ.15,000 வீதம் நான்கு நபர்களுக்கும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மேற்கண்ட நபர்களின் உறவினர்களிடம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.