Hindu – Malayali Caste Certificate was issued by Perambalur collector MCP
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா மலையாளப்பட்டி கிராமத்தில் இன்று ஆட்சியர் வே.சாந்தா, தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
மலைவாழ் மக்கள் அதிகளவில் வாழும் இப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மக்களைத் தேடி அரசு நிர்வாகம் என்ற அடிப்படையில் அனைத்துத் துறை அலுவலர்களும் வருகை தந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். மேலும், இப்பகுதி மக்களின் நெடுநாள் கோரிக்கையான சின்னமுட்லு அணைக்கட்டு அமைக்க தமிழக முதலமைச்சரால் முதற்கட்ட ஆய்வு பணிக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகள் விரைந்து மேற்கொண்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது இங்கு வாழும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்து-மலையாளி என்ற பெயரிலான சாதிச்சான்றிதழும் இன்று வழங்கப்படுகின்றது, என பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பேசியதாவது :
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கிராமப்புற்ஙகளில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் அரசு செயல்படுத்தும் திட்டங்களை சம்மந்தப்பட்ட அலுவலா;களை அணுகி, அத்திட்டங்கள் மூலமாக தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பல்வேறு துறை வாயிலாக 227 பயனாளிகளுக்கு ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 143 மனுக்கள் பெறப்பட்டு, தகுதியுடைய 92 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத் துறை , சமூக நலத்துறை, தாட்கோ, தோட்டக் கலைத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட நீர்வடி முகமை , வருவாய்த்துறை , வேளாண்மைத்துறை , பால்வளத்துறை , மகளிர் திட்டம் துறைகள் மூலம் மொத்தம் 227 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 2ஆயிரத்து 225- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரகளும் கலந்து கொண்டனர்.