In Perambalur all the ration shops in the district protested outside the district on behalf of DMK
பெரம்பலூர் : தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு, புழுங்கல் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை. பொருட்கள் வாங்க செல்லும் மக்களிடம் எந்த பொருளும் இல்லை என சர்வசாதாரணமாக பதில் சொல்கிறார்கள். எனவே, பினாமி ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் முற்றிலும் சீரழிக்கப்படுகிறது என்றும், தொடர்ந்து ரேசன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் வருகிற 13ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்” என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பிற்கு இணங்க, பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்டத்தின் அனைத்து ரேசன் கடைகள் முன்பும் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்தந்த பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் தலைமையிலும், நகரம் மற்றும் மாநகரங்களில் உள்ள வார்டுகளில் அந்தந்த பகுதி வார்டு செயலாளர்கள் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் தலைமையில் 11, 7, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் ரோவர் பள்ளி அருகில் உள்ள ரேசன் கடையிலும், இதே போன்று நகரின் பிற வார்டுகளை சேர்ந்த திமுகவினர் அருகே உள்ள ரேசன் கடைகளில கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் சி.ராஜேந்திரன் தலைமையில் குன்னம் ரேசன் கடையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போன்று மாவட்டத்தின் பலப்பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடததினர். நூற்றுக்கணக்கானோர் காவல் துறையினரால் கைது செய்ய்பட்டனர்.