Increased cash flow from the Government of Tamil Nadu Pongal gift! Merchants happy with people !!
பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 2500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை அறிவித்து, கடந்த 4ம் தேதி முதல் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு பெற்ற நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மகிழ்ச்சியுடன் இந்த பொங்கலை கொண்டாட துணிமணிகள், தேவையான பொருட்களை வாங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பெரம்பலூர் கடைவீதியில் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி பொங்கல் விற்பனை விறுவிறுப்பை அடைந்துள்ளது. மாவட்டத்தில், பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும், மக்கள் கைப்பைகளில், பொங்கலை கொண்டாட சாமான்கள் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. அதோடு, வியாபாரம் இல்லாமல் முடங்கி கிடந்த டீக்கடைகள், ஓட்டல்கள், சிற்றுண்டி கடைகள், தரைக்கடைகள், தள்ளுவண்டிகள், துணிக்கடைகள், தையல்கடைகள், பாத்திரக்கடைகள், மளிகைக் கடைகள், காலணி கடைகள், சூப்பர் மார்க்கட்டுகள் மற்றும் சிறு, குறு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதனால், பொதுமக்களுடன் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும் பணக்காரார்கள் கையில் இருக்கும் பணத்தை விட ஏழை – எளிய மக்களிடம் இருக்கும் பணமே அதிக அளவில் கைமாறி பலருக்கு வணிகத்தை அதிகரித்து வருகிறது என்பதை நிருபிக்கிறது. பொங்கல் பரிசு வாங்கிய சீரான மக்கள் தினமும் செலவு செய்ய நகரத்திற்கு வருகை தருவதால் பெரம்பலூர் நகர வணிகம் களைகட்ட தொடங்கி விட்டது.