Measles-Rubella vaccine in the office of the perambalur District Collector of Tomorrow Special Camp
தமிழகம் முழுவதும் பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மார்ச்-15 ஆம் தேதி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள, 1.8 கோடி குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1 லட்சம் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளினாலும், முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருவதாலும், மற்றும் உடல்நலக்குறைவு போன்ற பல்வேறு காரணங்களினாலும் பல பெற்றோர்கள் இந்த தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர். இந்த தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானதாகும். மேலும் நோய்களினால் அதிகம் பாதிக்கப்படும் 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளில் 100 சதவீதம் பேருக்கு இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் பெரியவர்களுக்கு ஏற்படும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் தொற்றையும் முற்றிலுமாக தடுக்கமுடியும்.
இதன்மூலம் தட்டம்மை மற்றும் ரூபெல்லா என்னும் கொடிய நோய்த் தொற்றை நம் சமூகத்திலிருந்து முற்றிலுமாக நீக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு வருகின்ற 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற உள்ளது.
பெரம்பலூரில் உள்ள 9 மாதம் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு இம்முகாமில் தடுப்பூசி போடப்படும். இம்முகாமில் முழு நேரமும் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்படுவர். பெற்றோர்களுக்கு இந்த தடுப்பூசி பற்றியுள்ள ஐயங்களை மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் பணி செல்லும் பெற்றோர்களின் வசதிக்காகவே இந்த முகாம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கள் குழந்தைகளின் நலன்கருதி அனைவரும் வந்து பயனடையுமாறு பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.