Online consultation for students who want to join vocational training centers: Perambalur Collector
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2020-ம் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. மேற்படி கலந்தாய்வு இணையவழியில் (ஆன்லைனில்) நடைபெற உள்ளதால் பொதுப்பிரிவு (முன்னுரிமை அல்லாத அனைத்து) விண்ணப்பதாரர்களும் தங்களுக்கு விருப்பமான 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை இணையவழியில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது ஒரே தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.
மேலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மட்டுமே தாங்கள் தேர்வு செய்த தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும். அதன் பின்னர் விண்ணப்பதாரர்களின் தரவரிசை இன சுழற்சிமுறை மற்றும் அவர்கள் கலந்தாய்வில் தேர்வு செய்த 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகள் போன்றவற்றின் அடிப்படையில் கணினி மென்பொருள் மூலம் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு உறுதி செய்யப்பட்டு தற்காலிக சேர்க்கை ஆணை (புரொவிஷனல் அட்மிசன் ஆர்டர்) வருகிற 26-ந் தேதி அன்று இணையவழியில் வழங்கப்படும்.
மேற்படி விண்ணப்பதாரர்கள் வருகிற 23-ந் தேதி முதல் 25-ஆம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை ஆன்லைனில் தாங்களே தேர்வு செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.