Perambalur: 50% subsidy on nutrition for pregnant dairy cows; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ”ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்” செயல்படுத்தப்படவுள்ளது, என கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் ஊரக ஏழை விவசாயிகளின் சினையுற்ற கறவைப் பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் நடப்பாண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து, உள்ளுர் சங்கத்தில் தொடர்ந்து பால் ஊற்றும் சினையுற்ற கறவைப் பசுக்களின் உரிமையாளர்கள் இத்திட்டத்தில் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவர்.
சினையுற்ற கறவைப்பசுக்களின் உடல்நலத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் வகையில், ஒவ்வொரு பசுவிற்கும் 4 மாதங்களுக்கு தினமும் 3 கிலோ வீதம் மொத்தம் ஒரு பசுவிற்கு 360 கிலோ சமச்சீர் தீவனம், தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின் சப்ளிமன்ட்ஸ் 1 கிலோ வீதம் 4 கிலோ ஆகியவை 50 சதிவிகித மானிய விலையில் வழங்கப்படும். மேலும் பெண்கள், விதவை, ஆதரவற்ற ஊனமுற்றோர் அல்லது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பால் விநியோகிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், திட்டம் தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்ள தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், தங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.