Perambalur: A judicial inquiry is underway regarding the death of Kottu Alaguraja; Trichy Police IG Balakrishnan gives an interview!

பெரம்பலூர் அருகே ரவுடி மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து தருவதாக கூறி அழைத்துச் சென்று, அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை வீசி தாக்கியதோடு சப்-இன்ஸ்பெக்டரை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றதாலேயே அழகுராஜா மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரவுடி வெட்டியதில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், திருச்சி போலீஸ் ஐ.ஜி பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

கடந்த 24 ஆம் தேதி திண்டுக்கல்லில் இருந்து (வெள்ளக் காளி என்பவரை) சென்னைக்கு எஸ்காடு அழைத்துச் சென்ற போது பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயற்சி செய்தது.

அந்த தாக்குதல் சம்பவத்தில், காவலர் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது கோயம்புத்தூரில் உயர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில், கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வீசிதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த புலன் விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வந்தனர்.

ரவுடி கொட்டு @ அழகுராஜா

இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று கொட்டு அழகுராஜா என்பவரை கைது செய்து விசாரணைக்கு அழைந்து வந்து, விசாரணை மேற்கொண்டு அவர் அளித்த தகவலின் பேரில், பல்வேறு இடங்களில் அலைக்கழிக்கப்பட்ட போலீசார் இறுதியாக திருமாந்துறை டோல்பிளாசா பகுதியில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக இருப்பதாக கொட்டு அழகுராஜா அளித்த தகவலின் பேரில் அங்கு அழைத்து சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய முன்ற போது, நாட்டு வெடிகுண்டை அழகுராஜா போலீசார் மீது வீசி தாக்கியதில், காவல்துறை வாகனம் சேதமடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அழகுராஜா-வை பிடிக்க முயன்ற குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை அழகுராஜா கையில் வெட்டி விட்டு தப்பியோட முயன்றார்.

இதனால் தற்காப்பு கருதி மங்களமேடு இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டதில் கொட்டு அழகுராஜா தலையில் குண்டடி பட்டு, சிகிச்சைக்காக காவல்துறை வாகனத்தில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். அப்போது போலீஸ் அனிதா, உள்ளிட்ட பல போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!