Perambalur: Collector launches dredging and strengthening of banks in Siruvachur Chinna Lake!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை கலெக்டர் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பராமரிப்பில் உள்ள சிறுவாச்சூர் சின்ன ஏரி 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால் மற்றும் ஏரி முழுவதும் முட்புதர்கள் மண்டி, மண் மேடிட்டு தூர்ந்து உள்ளதால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குளத்திற்கு செல்லும் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் சிறுவாச்சூர் கிராமத்தில் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் ஏரியை சுற்றியுள்ள திறந்தவெளி கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதாகவும், விவசாய பெருமக்கள் ஏரியில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி உள்ளதால் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் குளத்திற்கு நீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் கலெக்டர் தனிக்கவனம் செலுத்தி, சமூக பணியில் ஈடுபாடு கொண்டவர்களிடம் இப்பணி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில், ஏ.ஆர்.டி செல்வராஜ் ஒப்பந்ததாரர் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் சிறுவாச்சூர் சின்ன ஏரியில் வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மற்றும் சின்ன ஏரியை தூர்வாரி கரையைப் பலப்படுத்தி தருவதாக ஒப்புதல் பெறப்பட்டு தூர்வாரும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், இமயவர்மன், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் சதீஷ் மற்றும் தீபா, ஊராட்சி செயலர் காமராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.