Perambalur Collector V. Santha inspection on Coronavirus Prevention and Curfew
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் 144 தடை உத்தரவு காலத்தில் பொது மக்களின் பங்களிப்பை நேற்று மாவட்ட கலெக்டர் வே.சாந்தா வேப்பந்தட்டை, பாலையூர், நெய்குப்பை, மரவாநத்தம் மற்றும் வி.களத்தூர் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்பின் கலெக்டர் வே.சாந்தா தெரிவித்தாவது:
தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதனடிப்படையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, கிருமி நாசினிகள் தெளித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் சோப்பு போட்டு கைகளை கழுவுதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
மேலும் ஊரடங்கு அமல்படுத்தபட்டதிலிருந்து பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கபடுவதில்லை. மேலும் மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களால், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஒட்டுவில்லையும் சுகாதாரத்துறையின் மூலமாக ஒட்டப்பட்டுள்ளது. அவர்களது இல்லம் மற்றும் பிறபகுதிகளில் 24 மணிநேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நோயை பரவாமல் தடுத்திட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் தத்தமது இல்லங்களில் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறோம். வேப்பந்தட்டை, பாலையூர், நெய்குப்பை,மரவாநத்தம் மற்றும் வி.களத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு கொரானா நோய் தடுப்பு பணிகளை விரிவாக மேற்கொள்வதோடு ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை பொதுமக்களை வெளியில் அனுமதிக்காமல் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினேன், என தெரிவித்துள்ளார். அப்போது அலுவலர்கள் உடனிருந்தனர்.