Perambalur During the famine will ravage the municipal water
பெரம்பலூர் : வறட்சி மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் பொதுமக்கள் தண்ணீரை காலி குடங்களுடன் அலைந்து திரிந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
பெரம்பலூர் நகருக்கு முக்கிய ஆதரமாக இருந்த காவிரி (கொள்ளிடம்) கூட்டுகுடிநீர் திட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பத்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரு வாரங்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாததால் வசதியாக இருப்பவர்கள் விலைக்கும், இல்லாதவர்கள் பைக், சைக்கிள் மூலம் கிடைக்கும் நீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க பெரம்பலூர் நகருக்கு சோமண்டாபுதூர் கைகாட்டி பகுதியில் இருந்து ஒப்பந்தாரர் ஒருவரின் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
ஆனால், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு நீரேற்றம் செய்யும் பகுதிக்கு ஒரு கி.மீ தூரம் முன்பாகவே தண்ணீர் பைப்பில் இருந்து காற்று வெளியேறும் குழாயில் தரமற்றதாக பொருத்தப்பட்டதால் உடைந்து அதில் இருந்து தண்ணீர் பீறிட்டு வெளியேறி வீணாக எவருக்கும் உபயோகமின்றி தண்ணீர் நிலத்தில் பாய்கிறது.
அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் முழு அளவு தண்ணீரும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் சரியான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் விரும்புகிறார்கள்.