Perambalur: Ration items from house to house: Chief Minister’s Thayumanavar scheme; Minister Sivashankar launched it!
தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில்
தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில், எம்.எல்.ஏ ம.பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் ஔவையார் தெரு, வெங்கடேசபுரம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் ஆகிய பகுதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார்.
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் 15,764 பேர் பயன்பெறவுள்ளனர்
மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ம.ராஜ்குமார், பா. துரைசாமி, பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன், பெரம்பலூர் 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரியா மணிவாசகம், மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.