Perambalur: Subsidy increased to Rs. 20 lakhs for the repair and reconstruction of Christian churches: Collector’s information!
தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும், தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது, அவ்வாறு ஒரு தேவாலயத்திற்கு மானியத் தொகை வழங்கிய பின்னர் 5 வருடத்திற்கு அத்தேவாலயம் இம்மானியத் தொகை வேண்டி விண்ணப்பிக்க தகுதியற்றது.
இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட், ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள், பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும் கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 10 முதல் 15 வருடம் வரை உள்ள தேவாலய கட்டிடத்திற்கு ரூ.10 லட்சமும், 15 முதல் 20 வருடம் வரை உள்ள தேவாலய கட்டிடத்திற்கு ரூ.15 லட்சமும், 20 வருடத்திற்கு மேல் உள்ள தேவாலய கட்டிடத்திற்கு ரூ.20 லட்சமும் மானிய தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் ச. அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.