Perambalur: [Super 30]; Government model school at a cost of Rs. 56 crore; Ministers E.V. Velu and Sivashankar laid the foundation stone!

தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பெரியவெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு இன்று காலை அடிக்கல் நாட்டினர்.

தமிழ்நாடு அரசு மாதிரிப்பள்ளிகள் குழுமத்திற்கான உறுப்பினர் செயலர் ரா.சுதன், கலெக்டர் ந.மிருணாளினி ஆகியோர் தலைமைவகித்தனர். பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே, திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மாதிரிப் பள்ளி 2022-2023 கல்வியாண்டில் தொடங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் ஈடன் கார்டன் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாள் பெரம்பலூர் மாவட்டத்திற்கான மாதிரிப் பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் தங்கி பயில்வதற்கான பள்ளி வகுப்பறைகள் மற்றும் ஆண் பெண் இருபாலருக்கான தனித்தனி விடுதி வசதிகள் ரூபாய் 56 கோடி மதிப்பில் கட்டப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த அரசு மாதிரிப் பள்ளியானது தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன், 22 வகுப்பறைகள், 3 ஆய்வுக்கூடங்கள், நூலகம், கூட்டரங்கம், கணினி ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது,
400 மாணவர்கள், 400 மாணவிகள் தங்கிப்பயிலும் வகையில் விடுதி கட்டடங்கள் கட்டப்படவுள்ளது. இதில் தங்கும் அறை, சமையலறை, உணவுக்கூடம், சலவைஅறை, பன்னோக்கு அறை என மின்தூக்கி வசதியுடன் இந்த கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளது. 7 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த மாதிரிப்பள்ளி மற்றும் விடுதிகள் அமையவுள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் 138 மாணவர்கள், 145 மாணவியர் என மொத்தம் 283 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகீசன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், வேப்பூர் முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் அழகு.நீலமேகம், பிரபாசெல்லப்பிள்ளை மற்றும் திமுப பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட திமுக இணைஞரணி அமைப்பாளரும், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் உள்பட அரசு அலுவலர்கள், நாமக்கல்லை சேர்ந்த கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!