Petition to S.P. for ban on holding temple festival near Perambalur!
பெரம்பலூர் அருகே சிறுவயலூரில் கோயில் திருவிழாவை நடத்த தடை விதிக்கவேண்டும் என எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை அருகே உள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் சார்பில் ராஜேந்திரன் என்பவர் எஸ்பி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:
சிறுவயலூர் கிராமத்தில் எனது தந்தை பெரியசாமி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து 50 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீமாரியம்மன் கோயில், செல்லியம்மமன் கோயில், கம்ப பெருமாள் கோயில் ஆகிய கோயில்களை கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
இதை தொடர்ந்து எனது தலைமையில் எங்களது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்போடு 3 முறை கும்பாபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. கோவில் கட்டியது முதல் பரம்பரையாக படைப்பது, சட்டி கரகம் தூக்குவது, திருவிழா நடத்துவது, வரவு-செலவு பார்ப்பது உள்ளிட்ட அனைத்தும் நானும், எனது குடும்பத்தினர் தான் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவில் உருவாக்குவதற்கு எந்தவித சம்மந்தமுமில்லாத சட்டத்திற்கு புறம்பாக பாரம்பரிய வழக்குமுறைக்கு எதிராக எங்களை மிரட்டி 3 பேர் அடாவடியாக கோயில்களை கைப்பற்றி பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் முறைக்கு எதிராக வரும் 12ம்தேதி கோயில் திருவிழா நடத்த முயற்சிக்கின்றனர். எனவே கோயில் திருவிழாவை நடத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். மனுவினை பெற்றுக்கொண்ட எஸ்பி மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.