Public road traffic with legends asking drinking water near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள பாலையூர் கிராம மக்கள், குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டது பாலையூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, மேலும் அப்பகுதியில் பழுதான 5 கைப்பம்புகளை பழுது நீக்கமும் செய்து தரவில்லை என்பதால், அக்கிராமத்தில், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பாலையூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வேப்பந்தட்டை – நெய்குப்பை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
வெகு நேரமாகியும், சம்மந்தப்பட்ட வளர்ச்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் யாரும் நேரில் வரவில்லை எனக் கூறி அரசு பேருந்து மீது கல்வீச முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், தாசில்தார் பாரதிவளவன் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மோட்டார் சரிசெய்து சீரான முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் எனவும், பழுதடைந்த கைப்பம்புகள் அனைத்தும் சரிசெய்யப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வேப்பந்தட்டை நெய்குப்பை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.