Relief assistance in the Perambalur District Collector’s Redressal Meeting
பெரம்பலூர்: ஒவ்வொரு திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 255 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் சார்பில், சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் நிவாரண நிதிக்காக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை சங்கத் தலைவர் பி. கண்ணன், செயலாளர் ஜி. பாலகுருமூர்த்தி, பொருளாளர் ஆர். சண்முகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
ஆலத்தூர் வட்டம், சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணுசாமி மகன் முத்துசாமி என்பவர் கடந்த 09.09.2018 அன்று மின்சாரம் தாக்கி இறந்து போனவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3, லட்சம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, தனித்துணை ஆட்சியர் மனோகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.