Successful player in the national-level athletic competition, the incentives
பெரம்பலூர் : ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ஊக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2015-2016-ஆம் ஆண்டிற்கான 27வது தென்னிந்திய அளவிலான தடகளப் போட்டிகள் ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடாவில் செப்டம்பர் மாதம் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தடகளப் போட்டிகளில் 16-வயதிற்குட்பட்ட பிரிவில் என். நாகபிரியா என்ற வீராங்கனை பென்டாத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்ததற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஊக்க உதவித் தொகை ரூ.6000-ற்கான காசோலையை நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வழங்கப்பட்டது.
அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் விளைட்டுத்துறையில் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கும் நமது மாநிலத்திற்கும் தாய்த் திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று வீராங்கனையை வாழ்த்தினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக வழங்கப்படும் ஊக்க உதவித் தொகை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்டதில் 2 வீராங்கனை 1 வீரர் என 3 நபர்கள் மடடுமே விண்ணப்பித்திருந்தனர். அதில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் விளையாட்டு விடுதி மாணவி என். நாகபிரியாவிற்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா மற்றும் தடகளப் பயிற்றுநர் க.கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்