Tenth standard students to degree holder can apply for the subsidy to the unemployed: inform by perambalur Collector
பத்தாம் வகுப்பு முதல் பட்டம் படித்தவர்கள் வரை வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலமாக பயனடைய கல்வித் தகுதியை வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.2011க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.
மனுதாரர் தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 30.06.2016 தேதியில் 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு 50,000- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது. புதிய விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்த படிவங்கள் 31.08.2016 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00-மணி முதல் மதியம் 1.00-மணி வரை பெறப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்வதற்கு கீழ்க்காணும் அசல் ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். அனைத்து கல்வி சான்றிதழ்கள் மாற்றுச் சான்றிதழ் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை இவற்றுடன் வரவேண்டும் என பெரமபலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.