The reception in perambalur of the All India Protest Agricultural Council
பெரம்பலூர் : விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வழியில் பெரம்பலூருக்கு வந்த அகில இந்திய போராட்ட விவசாய குழுவினருக்கு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள் கடனை பாகுபாடின்றி அனைவருக்கும் தள்ளுபடி செய்யவேண்டும், எஸ்.எஸ் சாமிநாதன் குழு பரிந்துரைப்படி விவசாய விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்யவேண்டும், கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை ரூ 2 ஆயிரம் கோடியை உடனே வழங்கிடவேண்டும், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் மக்காச்சோளம், பருத்திக்கு 2016-2017ம் ஆண்டில் ராபி பருவத்தில் காப்பீடு செய்து விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை மட்டும் திரும்பி வழங்கியதை கண்டித்தும், இழப்பீட்டு தொகையை உடனே வழங்கிடவேண்டும், மக்காச்சோளம், பருத்தி, மானாவாரியில் காரீப் பருவத்தில் மட்டும் தான் பயிர்காப்பீடு செய்ய வேண்டும் என பின்பற்றி வருவதை மாற்றி ராபிப்பருவத்திற்கும் பயிர்காப்பீடு செய்ய மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அகில இந்திய போராட்ட விவசாயிகள் குழுவினர்களான மகாராஷ்டிரா எம்பி ராஜீ ஷெட்டி, ஒருங்கிணைப்பாளர் சிங், பாட்னா அகில இந்திய விவசாய மகாசபை பொதுசெயலாளர் ராஜாராம் சிங், ஐதராபாத்த கிரன்விஷா, கல்கத்தா வாழ்க விவசாயிகள் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் அவிக்ஷா, பெங்களூர் கவிதா குர்ஹாந்தி , மத்திய பிரதேசம் சுனில்லாம் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட செயலாளர் செல்லதுரை, முன்னாள் மாவட்ட தலைவர் வேணுகோபால், உழவர் மன்ற தலைவர் வரதராஜன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ரமேஷ்கருப்பையா, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் ஜெயராமன், அரும்பாவூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ர உட்பட பலர் கலந்துகொண்டனர்.