The students can use to practice reading the newspaper! IAS Officer advice
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக தொடக்க, நடுநிலை, உயார்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் அடைவுத் திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
மூன்றாம் கட்டமாக வேப்பூர் ஆலத்தூர், வேப்பந்தட்டை மற்றும் பெரம்பலூர் ஒன்றியங்களிலுள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 169 பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் பாடங்களில் அடைவுத்திறன் தேர்வு நடைபெற்றது.
தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் கற்றல் அடைவுதிறன் மற்றும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று (17.09.2016) மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் பாடங்களில் அடைவுத் திறன் மற்றும் வாசித்தல் திறனில் 40 சதவீதத்திற்கு குறைவாக பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களை பள்ளிகள் வாரியாக ஆய்வு செய்தனர்.
ஆய்வில் கற்றல் அடைவுத்திறன் மற்றும் வாசித்தல் திறனில் 40 சதவீதத்திற்கு குறைவாக பள்ளிகள் பெற்று இருப்பதற்கான காரணத்தினையும் மாணவர்களின் வாசித்தல் மற்றும் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கேட்டறிந்தனர்.
மேலும், மாவட்ட ஆட்சிப் பணியாளர் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக பள்ளிகளுக்கு வழங்கப்படும் செய்திதாள்களை முறையான வாசிப்பு பயிற்சிக்கு பயன்படுத்தும்படியும், தினந்தோறும் மாணவர்களுக்கு வகுப்பறையில் நடத்தப்படும் சிறு தேர்வுகள், சொல்ல கேட்டு எழுதுதல், செயல்பாடுகளை தொடர்ச்சியாக செய்து மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்தும்படி ஆலோசனை வழங்கினார். மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்
இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி , உதவி தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இவ்வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.