To conduct caste survey for OBC people; Interview with VCK leader Thol. Thirumavalavan in Perambalur.
பெரம்பலூருக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:
திமுக அரசு சமூக நீதி அரசு என்பதை உறுதிப்படுத்தும்விதமாக முதல்வரின் அறிவிப்புகளும், செயல்திட்டங்களும் உள்ளன. பெரியாரின் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக அறிவித்த தமிழக முதல்வருக்கு விசிக சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்றைய தினம் செப்.17 தமிழகமெங்கும் பெரியார் சிலைகள் அருகே விசிக சார்பில் சமூக நீதி நாள் உறுதி மொழியை ஏற்கும் நிகழ்வு நடைபெறும்.
சிறையில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் தண்டனைக் காலத்தை கழித்தவர்கள் அனைவரையும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு விடுதலை செய்ய வேண்டும் என விசிக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். மாநில உரிமைகளுக்காக இந்திய அளவில் தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பிய, மாநிலங்களுக்கான உரிமை பாதுக்கப்பப்பட வேண்டும். கூட்டாட்சி தத்துவத்துவத்தையும் வலியுறுத்திய பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை மாநில சுயாட்சி தினம் அல்லது மாநில உரிமைகள் தினம் ஆக கொண்டாட தமிழக முதல்வர் அறிவிப்பு செய்ய வேண்டும் என விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சாதிவாரி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையை விசிக ஆதரிக்கிறது. அப்படி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். இது பல்வேறு பிரச்சனைகளுக்கு விடையளிக்கும். தமிழக முதல்வர் இந்த கோரிக்கைகுறித்து பரீசீலிக்க வேண்டும். என தெரிவித்தார். மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனும் விசிகவின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், இரா.கிட்டு, கட்சி செய்தி தொடர்பாளர் உதயகுமார், மற்றும் வெங்கனூர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.