to fulfill the demands of the unorganized workers demonstrated in perambalur
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஏ.ரெங்கநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், அமைப்பு சாரா நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும், வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும், புதிய சாலை மசோதாவை கைவிட வேண்டும்,
பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும், தரைக்கடை மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க வேண்டும், நலவாரியத்தில் கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்தை கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும், நலவாரியத்தில் இடைத்தரகர்களை அனுமதிக்க கூடாது,
ஆட்டோ தொழிலாளர்களுக்கு, படிப்பை காரணம் காட்டி, பேட்ஜ் வழங்குவதை தடை செய்யக்கூடாது, முறைசாரா தொழிலாளர் பாதுகாப்புக்கு ஆண்டுதோறும், ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டு மனை வழங்குவதுடன் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,
படித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆட்டோ இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அரசு அலுவலர்களிடம் வழங்கினர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஆர். அழகர்சாமி, மற்றும் சி.ஐ.டியூ ஆட்டோ, அனைத்து வகையான ஆட்டோ ஓட்டுனர்கள், தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ சாலையோர வியாபாரிகள் சங்கம், சி.ஐ.டி.யூ பொது தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.