Unidentified vehicle collided Deer death near Perambalur
பெரம்பலூர் அருகே செங்குணம் பிரிவு சாலை பகுதியில் உயிரிழந்து கிடந்த கிளை மானின் சடலத்தை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், பாடாலூர், வெண்பாவூர், ரஞ்சன்குடி, மங்களமேடு, கீழப்புலியூர், மேலப்புலியூர், சித்தளி, சின்னாறு, கை.களத்தூர், தொண்டமாந்துறை, செம்மலை, பூலாம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வனக்காப்புக் காடுகளில் மான், மயில், காட்டுப்பன்றி, நரி, முயல், காட்டுப் பூனை, உள்ளிட்ட ஏராளமான வன விலங்குள் உள்ளது.
இவை கோடை மற்றும் வறட்சி காலங்களில் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் வருவதும், சாலையை கடப்பதும் வழக்கம். அவ்வாறு வரும் வனவிலங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறப்பதும், கிணறுகளில் தவறி விழுந்து படுகாயமடைந்து உயிரிழப்பதும், தெரு நாய்கள் கடித்து குதறி இறந்து போவதும், சில நேரங்களில் மாமிசத்திற்காக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே அரியலூர் சாலையில் சித்தளி மணக்காடு பகுதியில் சுமார் 1 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனச்சரகர் சசிகுமார், வனக்காவலர் மணிமேகலை, வனவர் சுகந்தி, வனக்காப்பாளர் ராஜூ உள்ளிட்ட வனத்துறைனர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானின் சடலத்தை கைப்பற்றி பேரளி கால்நடை மருத்துவர் ரூபா உள்ளிட்ட மருத்துவ குழுவினரின் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.