Vayalappadi vaigarai andavar temple car festival : multitudes of devotees took the cart pull near in perambaur
பெரம்பலூர் மாவட்டம், வயலப்பாடி வைகரை ஆண்டவர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த வைகரை ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருடந்தோறும் ஆவணி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி திருவிழாவுக்காக கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன தொடங்கி நடந்து வருகிறது.
தினமும் ஒவ்வொரு உபயதாரர்கள் பங்களிப்புடன் வைகரை ஆண்டவர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. தினமும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று நாடு நலம் பெற வேண்டியும், மழை வளம் வேண்டியும் பக்தர்கள் சக்தி அழைத்து, பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு வழிபாடு நடத்தினர் மற்றும் சுவாமி வீதிஉலா நடந்தது.
இன்று காலை வைகரை ஆண்டவருக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18வகையான முலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து வெடி, மேள தாளங்கள், முழங்க திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டது. திருஷ்டி பூஜைகள் நடைபெற்றதும் பகல் 10.15 மணியளவில் நாதஸ்வர இசை, மேளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கிராம முக்கியஸ்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் அம்மன் பக்தி பாடல்கள் பாடியபடி தேரோடும் நான்கு வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்தனர். ஒவ்வொரு தெருவிலும் பக்தர்கள் கூடிநின்று அம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை தேர் நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
தேரோட்டத்தில் கீரனூர், துங்கபுரம், வயலூர்,வேப்பூர், கல்லை, ஒலைப்பாடி, கோவிந்தராஜபட்டினம், உட்பட சுற்று வட்டப் பகுதி கிராம மக்களும் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குன்னம் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
படவிளக்கம் : வயலப்பாடி வைகரை ஆண்டவர் கோயில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்