கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் கால்நடை மருந்தககங்களில் பணிபுரிய காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட இன்று முதல் மே.17 வரை பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்களுக்கு மொத்தம் 2,484 பேர் விண்ணப்பித்துள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 350 பேர்வீதம் நேர்முகத் தேர்வுக்கு கலந்துகொள்ளும் வகையில், கலந்துகொள்ள வேண்டிய தேதி குறிப்பிடப்பட்டு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று கலந்துகொள்ள 350 நபர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டு அவர்களில் 262 நபர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய நேர்முகத் தேர்வை மண்டல இணை இயக்குநர் மு.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். நேர்காணலின் போது விண்ணப்பித்தவர்கள் மிதிவண்டி ஓட்டிக்காட்டுதல், கால்நடைகளை கையாளுதல் மற்றும் இதர தகுதிகள் கால்நடைத்துறை அலுவலர்களால் சோதிக்கப்பட்டது.
இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள இதுவரை அழைப்புக்கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் www.tn.gov.in என்ற வலைதள முகவரியிலிருந்தோ அல்லது கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.