Woman from Perambalur district dies after undergoing medical abortion

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக கருத்தரித்துள்ளார்.

இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணை? பெண்ணா? என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் தொழுதூர் இராமநத்தம் சென்றுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக கருவில் உள்ளது பெண் குழந்தை என கண்டறிந்துள்ளனர்.

பின்னர் நேற்று முன்தினம், வியாழக்கிழமை அன்று இராமநத்தத்திற்க்கு கருக்கலைப்பு செய்ய சென்றனர். அங்கு திட்டக்குடியை சேர்ந்த முருகன் என்பவர் ஓம் சக்தி மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். அந்த மெடிக்கல் கடையில் வைத்தே அனிதாவிற்க்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது காலையில் இருந்து மாலை வரை அனிதா மயக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் சத்தம் போட்டுள்ளார். பின்னர் முருகன் தனது காரில் பெரம்பலூரில் உள்ள 2 தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அப்போது வேல்முருகன் தனது மனைவியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் சேர்க்க சென்ற போது முருகன் அங்கிருந்து தப்பிவிட்டார். பின்னர் கடந்த 2 நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் அனிதா சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் மெடிக்கல் கடை நடத்தி வந்த முருகன் டிகிரி மட்டுமே முடித்த நிலையில் மெடிக்கல் கடையில் வைத்தே கருக்கலைப்பு செய்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் போலீசார் முருகனை ராமநத்தம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே போன்று, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள் அரசு மருத்துவமனைகளில் போதுமான சிகிச்சை கிடைக்காது என்ற நம்பிக்கையில், பொதுமக்கள் அருகில் உள்ள மெடிக்கல் கடைகளிலேயே அதிக அளவில் வைத்தியம் பார்த்து கொள்கின்றனர்.

மேலும், 10ம் வகுப்பு கூட முடிக்காதவர்கள், காயத்திற்கு கட்டு போடுபவர்கள் என பலர் மெடிக்கல் கடை நடத்தி வருவதும், அவர்கள் அரசு பதிவு பெற்ற மருத்துவர்களின் பெயர் பதித்த போர்டுகளை வைத்து கொண்டும், ம்ருத்துவர்களுக்கு மாதந்திர கப்பம் செலுத்தி வைத்தியம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில், மெடிக்கல் நடத்தி வருபவர்கள் அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு கப்பம் செலுத்தி வருகின்றனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!