![](https://i0.wp.com/www.kalaimalar.com/wp-content/uploads/2017/03/Jayalalithaa-smile-300x203.jpg?resize=300%2C203)
file copy
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானவை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அதற்கான ஆதாரமாக வீடியோவும் தாக்கல் செய்யப்பட்டது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அம்ருதா தாக்கல் செய்திருந்த பிறந்த தேதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்று வாதிட்டார். இறந்தவர்களின் பெயர்கள் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினர். 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிறந்ததாக அம்ருதா தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஜூலை மாதம் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொண்டிருப்பதாக கூறி, அதற்கான வீடியோ ஆதாரத்தையும் நீதிபதியிடம் தலைமை வழக்கறிஞர் போட்டு காண்பித்தார்.அப்போது ஜெயலலிதா கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால், ஒரு மாதத்தில் குழந்தை பிறப்பது சாத்தியமில்லை சுட்டிக்காட்டினார். போயஸ் தோட்டத்திற்கு பல முறை வந்து சென்றதாக கூறும் அம்ருதா, ஏன் ஒரு முறை கூட அவருடன் போட்டோ எடுக்கவில்லை என்றும் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுப்பதற்கு பதில், அவரது ரத்த உறவுகளின் ரத்த மாதிரிகள் டிஎன்ஏ சோதனை நடத்தலாமே என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து வழக்கில் அனைத்து விவகாரங்களும் கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.