Perambalur: Special Gram Sabha meeting for World Environment Day; DRDA Project Director S. Devanathan participated in the meeting at Siruvachur.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூன்- 1 முதல் ஜூன் – 5 வரை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் 121 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. சிறுவாச்சூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன்கலந்து கொண்டார்.
இதில், கிராம மக்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து பொதுமக்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது, இழிவுபடுத்தும் பொருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள் சாலைகள், தெருக்கள், குடிநீர் ஆதாரங்கள் மற்றும் பொது சொத்துக்களின் பெயரை மாற்றுதல் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது, ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வரவு செலவு மற்றும் பணி முன்னேற்ற அறிக்கை குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்தும், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் குறித்து, அனைத்து வகையான தொழில்களில் குழந்தைகளும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் ஈடுபடுத்தக்கூடாது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படும் சுயவேலைவாய்ப்பு பயிற்சிக்கு தகுதியான இளைஞர்களை விண்ணப்பிக்க அறிவுறுத்துதல், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சியாக தொடர்ந்து இருப்பதை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு பெருமைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் ஊராட்சிக்கான வரவு செலவுகள் குறித்து பொதுமக்களிடையே வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெற்றுக்கொண்டார். தூய்மை பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதி, மற்றும் அரசு அலுவலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497