பெரம்பலூர் மாவட்ட மக்களின் கல்வித்தரத்தினை உயர்த்திடும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி மிகவும் பின் தங்கிய பகுதியான வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், வேப்பந்தட்டையில் அரசு கலை அறிவியல் கல்லூரியையும் அமைக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதேபோல் வேப்பந்தட்டையில் அமைய உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்ததாவது:
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது 43 ஆயிரத்து 772 சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்டுள்ளதாக கட்டப்படவுள்ளது. இக்கட்டடத்தில் முதல்வர் அறை ஒன்றும், 4 எண்ணிக்கை துறை தலைவர் அறைகள், 2 எண்ணிக்கை பேராசிரியர்கள் அறைகள், 14 எண்ணிக்கை வகுப்பறைகள், அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் பயன்படுத்தும் விதத்தில் கழிப்பறை வசதிகள், மாணவர் பல்பொருள் அங்காடி, நூலகம், 2 ஆய்வகங்கள், 2 கணினி ஆய்வகம், 1 கூட்ட அரங்கம் என மொத்தம் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் இக்கல்லூரி அமைக்கப்பட்டு வருகின்றது.
அனைத்து கட்டுமானப்பணிகளும் வருகின்ற மே மாதத்தில் நிறைவுப்பெற்று, 2016 -17 கல்வியாண்டுக்கான வகுப்புகள் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டு முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என அவர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின் போது உதவி செயற்பொறியாளர் விஜயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497