Agriculture Festival in Namakkal -2018
நாமக்கல் நகரில் வேளாண்மைத்திருவிழா-2018 நேற்று துவங்கியது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த வேளாண் திருவிழா-2018, கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று துவங்கியது.
கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்து பார்வையிட்டார். நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் டாக்டர் மோகன் முன்னிலை வகித்தார். நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வரவேற்றார்.
இத்திருவிழாவில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மாவட்ட இணைத்துறைகளான வேளாண்மைத் துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலை, பட்டு வளர்ச்சி மற்றும் வனத்துறைகளுடன் இணைந்து இந்த முகாம் நடைபெறுகிறது.
இதில் 45க்கும் மேற்பட்ட அரங்குகள் கொண்ட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழக வல்லுநர்களின் கருத்தரங்கம் மற்றும் காணொலிக்காட்சி மூலம் விரிவாக எடுத்துரைக் கப்படுகிறது.
மேலும் விவசாயம் மற்றும் இதர துறைகளின் புதிய தொழில்நுட்பங்கள் செயல்விளக்கங்கள் மூலம் காண்பிக்கப்படுகிறது.இத்துடன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று துவங்கிய இந்த வேளாண் திருவிழா வரும் 28ம் தேதி வரை 3 நாட்கள் நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள பாவை மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த விழா நடைபெறுகிறது. விழாவின் முடிவில் வேளாண்மை அறிவியல் நிலைத்தின் உதவிப்பேராசிரியர் முருகன் நன்றி கூறினார்.