finger_vote பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்ட மன்ற தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறைக்குள் வைத்துப் பூட்டி சீல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார், தேர்தல் பொது பார்வையாளர் விஷ்ணு, செலவினப் பார்வையாளர் பி ஜு தாமாஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்ததாவது:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தல் 2016-க்கான வாக்குப்பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியாகவும், எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி சுமூகமாக நடைபெற்றது.

பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 79.40 சதவீதமும், குன்னம் சட்ட மன்றத்தொகுதியில் 79.69 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 79.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கும் எண்ணும் மையமான தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு வரப்பட்டு, பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் தரைதளத்திலும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்தளத்திலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் பத்திரமாக வைக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் பணி நாளை அன்று காலை 08.00 மணிக்கு துவங்கப்பட உள்ளது. முதலில் அஞ்சல் வாக்குகள் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் எண்ணப்பட உள்ளது.

8.30 மணியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை 17 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது. மிண்ணனு வாக்குபதிவுகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 மேஜைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர். உதவியாளர் மற்றும் நுண்பார்வையாளர் என நான்கு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அச்சுற்றில் பெறப்பட்ட வாக்குகள் விபரம் அறிவிப்பு பலகையில் எழுதப்படும்.

இவைதவிர ஒவ்வொரு சுற்றுக்கான விபரம் அந்தந்த வேட்பாளர் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும். மேலும், ஒலிபெருக்கியிலும் தெரிவிக்கப்படும்.

வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிக்கும் பணியில் 40 நபர்களும், வாக்கு எண்ணும் பணிக்கான உதவியாளர்களாக 80 நபர்களும், நுண்பார்வையாளர்களாக 40 நபர்களும், தபால் வாக்குகளை எண்ணும் பணியில் 26 நபர்களும், இதர பணிகளுக்காக 60 நபர்களும், என மொத்தம் 246 பணியாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 24 துணை இராணுவத்தினரும், 172 காவலர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மற்றும் நகராட்சி பணியாளர்கள் 20 நபர்களும், தீயணைப்பு துறையைச் சேர்ந்த 20 நபர்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபடுத்தப்பவுள்ளனர்.

மேலும் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தலா 16 வெப் கேமராக்களும், கட்டிடத்தை சுற்றி 8 வெப் கேமராக்களும் என மொத்தம் 40 கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையம் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடனும், அடிப்படை வசதிகளுடனும் தயார் நிலையில் இருக்கிறது.
என தெரிவத்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!