52nd Remembrance Day of Anna: Special Worship and Anna Thaanam at Siruvachchur Madurakaliamman Temple


தமிழக அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் கலெக்டர் (பொ) ராஜேந்திரன் தலைiமையில் நடந்தது.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனரும், பேரறிஞருமான அண்ணாவின் அரும்பணியினை போற்றும் வகையிலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவராற்றிய பணியினை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து நடத்தி, கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட வஸ்திரங்களில் நல்ல நிலையில் உபரியாக உள்ள புடவைகளை ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவசமாக
வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானமும், புடவைகளும் வழங்கப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக உணவுகள், தரமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொட்டலமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாவட்ட அறங்காவல் குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், செயல் அலுவலர் சு.அருண்பாண்டியன், கோவில் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!