A bookshelf of everyone in the house should be – a writer Kanmani Gunasekaran Speech
பெரம்பலூர் மாவட்டத்தில் நேஷ்னல் புக் டிரஸ்ட் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா – 2017 ன் நான்காம் நாள் நிகழ்ச்சிகள் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கண்மணி குணசேகரன் “சமூக அமைப்புகளில் அம்மான்” என்ற தலைப்பில் பேசியதாவது:
அம்மான் என்றால் தாய்மாமன் என்பது பொருளாகும். நமது தமிழ்ச்சமூக அமைப்பு தாய் மாமன் என்ற உறவுமுறைக்கு ஒரு முக்கிய இடமளித்திருக்கின்றது. சகோதரர்களுடன் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மாமன் என்ற உறவின் மகத்துவம் தெரிந்திருக்கும். பொதுவாக பிள்ளைகள் அதிலும் பெண்பிள்ளைகள் தாய்மாமன் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள்.
இன்றைய சூழலில் நாம் உறவுமுறைகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதுபோன்ற உறவு முறைகளை, நமது பண்டைய மரபுகளை நமக்கு இன்றும் சொல்லித்தருபவை புத்தகங்களே.
நம் அனைவரது வீட்டின் முகப்பு அறையிலும் புத்தக அலமாரி இருக்க வேண்டும். வாஸ்து பார்த்து வீடு கட்டினால் சில தோஷங்கள் போகும் என்பது ஐதீகம். ஆனால் புத்தகங்கள் இருக்கும் வீட்டில் சகல தோஷங்களும் போய்விடும். மனதுக்கு நன்மையும், அமைதியும், சிந்தனையும் தருபவை புத்தகங்களே என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுத்தாளர், அமுதசுரபி ஆசிரியர் முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது :
நமது தமிழக கலாசாரம் மிகவும் தொன்மையானது, இத்தொன்மையான கலாசாரத்தை கலையிழந்து விடாமல் கட்டிக் காட்பது இதுபோன்ற புத்தகத் திருவிழாக்களே. இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் மூலம் நமது பண்பாடு மற்றும் கலாசாரத்தை பேணி பாதுகாக்கும் காவலா;களான புத்தக எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை வெளிப்படுத்த மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இதனால் நமது பண்பாட்டின் பொக்கிஷங்களான நமது எழுத்தாளர்கள் பொருளாதார நிலையில் பேணி பாதுகாக்க ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் எழுத்தாளர்களின் பொருளாதார சிக்கல்கள் தீர வழிவகை கிடைக்கும், என பேசினார்.
பின்னர் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சிவகாசி எம்.ராமச்சந்திரன் “உயிரும், உயிப்பும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
நேற்றைய நிகழ்ச்சியில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.